பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சார்மி கவுர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ளது.
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, துனியா விஜயை நீண்ட காலமாக கவனித்து வருவதாகவும், அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் மிகுந்த ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவதாகவும் தெரிவித்தார். இயக்குநர் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக ஏற்று, கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார் என்றும் பாராட்டினார்.
மேலும், விடிவி கணேஷின் நடிப்பு திறமை குறித்து பேசுகையில், அவருடன் இணைந்து நடித்த பிறகே அவரது திறமையை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள முடிந்ததாக கூறினார். படப்பிடிப்பு தளத்திலும் திரையிலும் எப்போதும் உற்சாகத்தை ஏற்படுத்தும் கலைஞர் என்றும் குறிப்பிட்டார். சம்யுக்தா குறித்து பேசிய அவர், திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை என்றும், கதாபாத்திரத்தை மிக விரைவாக புரிந்து கொண்டு இயல்பாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் என்றும் பாராட்டினார்.
தயாரிப்பாளர் சார்மி குறித்து பேசும்போது, எந்த சவாலான சூழலிலும் அமைதியாக செயல்பட்டு படத்தின் தரத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் என்று புகழ்ந்தார். இயக்குநர் பூரி ஜெகந்நாத் குறித்து கூறுகையில், அவர் ஒரு வரலாறு என்றும், தொடர்ந்து புதிய கதைகளை உருவாக்கும் எழுத்தாளரும் படைப்பாளியும் என்றும் தெரிவித்தார். மேலும், தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கிய ‘அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி’ திரைப்படம் தமிழில் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற பெயரில் வெளியானபோது, அதில் துணை நடிகராக ரூ.400 சம்பளத்திற்கு நடித்த அனுபவத்தையும் விஜய் சேதுபதி பகிர்ந்து கொண்டார்.
