‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து, விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என பெயர் வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் முதல் பாதியை விஜய்யின் திரையுலகப் பயணம் மற்றும் அவர் அடைந்த சாதனைகளை மையமாக வைத்து உருவாக்குவேன் என்றும், சினிமாவில் உச்சத்தை அடைந்த அவர் அரசியலில் களமிறங்கிய முடிவை இடைவேளைக் காட்சியாக அமைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்பிறகு வரும் இரண்டாம் பாதியில் விஜய்யின் அரசியல் பயணம், மக்கள் சேவை மற்றும் பொதுவாழ்க்கையை முன்னிலைப்படுத்துவேன் என இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது விஜய்யின் பயோபிக் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான திட்டமும் இல்லாத நிலையில், அவரது வாழ்க்கையை படமாக்கும் எண்ணமே தன்னை உற்சாகப்படுத்துவதாகவும் அஸ்வத் மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். மறுபுறம், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிக்கும் ‘தர்மன்’ படப்பிடிப்பில் அஸ்வத் மாரிமுத்து பிஸியாக உள்ளார். மேலும், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகராகவும் அவர் அறிமுகமாக உள்ளார்.
—
