மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘சர்வம் மாயா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் நிவின் பாலி மீண்டும் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, அவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதிச்சாயா’ திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி அதிக கவனம் பெற்றது. அதில் ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி நடித்த கதாபாத்திரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மோகன்லால் மற்றும் நிவின் பாலி ஆகியோரின் முகங்களாக மாற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, ‘பிரதிச்சாயா’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவின் பாலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ‘காயங்குளம் கொச்சுன்னி’ திரைப்படத்தில் ஏற்கனவே மோகன்லாலுடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே மோகன்லாலும் தானும் இணைந்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான நல்ல கதையுடன் கூடிய திரைப்படத்தில் நடிக்க விருப்பம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு சிறந்த கதை மற்றும் திறமையான இயக்குநர் கிடைத்தால், ‘மெய்யழகன்’ போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்போம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
