தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ரவி மோகன், ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது தொடக்க காலத்திலிருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவது அவரது சிறப்பாகும். தற்போது, இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
ரவி மோகனின் 34வது படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இப்படத்தையும் இயக்குகிறார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் நடிகையாக அறிமுகமாகிறார். மேலும், இயக்குனர் பி.வாசுவின் மகனான சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகளை ரவி மோகன் கடந்த டிசம்பர் மாதமே முடித்துவிட்டார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது, ‘கராத்தே பாபு’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் நாசர் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
