இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு குறித்து ஏற்கனவே பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இருப்பினும், அவரது வாழ்க்கையில் அதிகம் கவனம் பெறாத ஒரு குறிப்பிட்ட 21 நாட்களை மையமாக வைத்து புதிய இந்தி திரைப்படம் உருவாகி வருகிறது. காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான ஒரு மாற்றத்தை இந்தப் படம் திரையில் பதிவு செய்யவுள்ளது.
காந்தியாக நடிக்கவிருப்பது பாலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவரான மனோஜ் பாஜ்பாய். ‘அஞ்சான்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் மகாத்மா காந்தியின் கதாபாத்திரத்தை ஏற்கிறார். இப்படத்தை இயக்குநர் சுகிர் மிஸ்ரா இயக்குகிறார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவிருந்த காலகட்டத்தில் டெல்லி அரசியல் அதிகாரத்தின் முக்கிய மையமாக மாறிக்கொண்டிருந்தது. அந்தச் சூழலில் காந்தியடிகள் எடுத்த எதிர்பாராத தீர்மானம் என்ன என்பதையும், அந்த முடிவுக்குப் பிறகு அவர் தன்னை எவ்வாறு மாற்றிக்கொண்டார் என்பதையும் மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல், காந்தியின் வாழ்வில் மறைந்திருக்கும் ஒரு முக்கிய அத்தியாயத்தை இப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
