கடந்த 2024 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் வெளியாகி பான் இந்திய அளவில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியான பிறகு அதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் அடுத்த பாகம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் சில காரணங்களால் விலகியதாக தகவல் வெளியானது. அதன்பின் அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று சங்கர் பள்ளியில் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்ட படப்பிடிப்பு அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் தொடர்பான காட்சிகளுடன் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பில் நடிகர் பிரபாஸ் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
