இயக்குநர் ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராணா தனது நடிப்பால் பெரும் கவனம் பெற்றார். அந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் உடல்நலம் மேம்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது உடல்நிலை குறித்து அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அந்த காலத்தில் எழுந்து நடப்பதற்கே முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். மருத்துவ பரிசோதனையில் அவரது கிட்னியில் பிரச்சினை இருப்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இதயத் துடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவை சீராக இல்லாத நிலையும் இருந்ததாக மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார். இதனால் அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் உயிருக்கு ஆபத்தும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்ததாகவும் கூறினார்.இந்த உடல்நலப் பிரச்சினைகளால் உடல் எடை மிகவும் குறைந்து உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். பின்னர் அமெரிக்காவில் கிட்னி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் பிறகு மெதுவாக உடல்நிலை மேம்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டதாகவும் அவர் கூறினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட காலத்தில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் கதாபாத்திரங்களைத் தவிர்த்ததாகவும், தற்போது கூட உடலை அதிகமாக சோர்வடையச் செய்யும் வேடங்களை ஏற்காமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழில் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவர் பின்னர் ‘காந்தா’, ‘பராசக்தி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
