நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமப்புறமான காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 75 வயது மூதாட்டியாக மையக் கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. வட்டிக்கு பவுன் கொடுக்கும் தாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த அந்த டீசர் பலரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து ‘தாய் கிழவி’ திரைப்படம் வரும் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதே சமயம், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ‘தாய் கிழவி வாரா..’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நிவாஸ் கே. பிரசன்னா இசையில், நடிகர் சிவகார்த்திகேயன் குரலில் இந்த பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்கு கருமாத்தூர் மணிமாறன் வரிகள் எழுதியுள்ளார்.
