தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் மகேந்திரன். சிறு வயதிலேயே திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம், “மாஸ்டர் மகேந்திரன்” என்ற பெயரால் ரசிகர்களிடையே பிரபலமானார். குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் நாயகனாக வளர்ந்த அவர், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரமான பவானியாக நடித்தது, மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதன் பின்னர், திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் என கதையும் வலுவான கதாபாத்திரமும் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் தனது திரைப் பயணத்தை அவர் மாற்றியுள்ளார்.
இதனுடன், சமீப காலங்களில் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் தொடர்ந்து பிசியாக நடித்துவருகிறார். இந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘நீலகண்டா’ திரைப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
‘நீலகண்டா’ திரைப்படத்தை ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் சார்பில் எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு பிரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு, சிவகார்த்திக் தன்டா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கர்மா மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒரு சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் எதிரியை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை மையமாக வைத்து, இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் மகேந்திரன் நடித்த ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
