தெலுங்கு திரையுலகத்தில் சமீப காலமாக பான் இந்தியா திரைப்படங்கள் என்ற கருத்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சில முன்னணி நடிகர்கள் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர். அந்த வகையில், ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா போக்கை தொடங்கிய பிரபாஸ், அதன் பின்னர் தொடர்ந்து அதே வகை படங்களிலேயே நடித்து வருகிறார்.
அவர் நடித்துத் இந்த சங்கராந்திக்கு வெளியான ‘தி ராஜா சாப்’ திரைப்படம், சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்து தற்போது தனது ஓட்டத்தை முடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. இன்னும் ஓரிரு திரையரங்குகளில் மட்டுமே இந்த வார இறுதி வரை படம் திரையிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இப்படத்தின் தோல்வி தெலுங்குத் திரையுலகத்தை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஐந்து படங்களில், இரண்டு படங்களைத் தவிர மற்ற மூன்று படங்கள் லாபகரமாக அமைந்துள்ளன.
இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியான பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா 2’ திரைப்படம் தோல்வியடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஒரே மாதத்திற்குள் ‘தி ராஜா சாப்’ படம் சந்தித்த தோல்வியும் தெலுங்கு சினிமாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இரண்டு முன்னணி நடிகர்களின் தோல்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், ‘மன ஷங்கர வரபிரசாத் காரு’ திரைப்படத்தின் மூலம் சிரஞ்சீவி பெற்ற வெற்றி, திரையுலகினருக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
