நடிகை கோமலி பிரசாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மண்டவெட்டி’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, அவர் தனது ‘டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தில் பி.எல். தேனப்பன், கஜராஜ், அம்ரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லர் வகையில் உருவாகும் இந்த திரைப்படம், ஒரு பெண்ணின் உளவியல் ரீதியான மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறது. அதே நேரத்தில் மனித உணர்வுகளின் ஆழம், அந்த உணர்வுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மங்கள் ஆகியவற்றையும் பரபரப்பான காட்சிகளுடன் இந்த படம் வெளிப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் குறித்து இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பேசுகையில், “’வெள்ளகுதிர’ படத்திற்குப் பிறகு நான் இயக்கும் அடுத்த படம் இதுவாகும். நாயகிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்ட கதையை கொண்ட திரைப்படம் இது. உணர்வுகளையும் துணிச்சலான கதை சொல்லலையும் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் உருவாகும். இந்தப் படத்திற்கு பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் வேணு கோபால் இசையமைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
