பெண்களை மையமாகக் கொண்ட தரமான ஆக்ஷன் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் அதிகரிக்க வேண்டும் என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், பெண்கள் படைப்பாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் புதிய வகை கதைகளும் உருவாகும் எனக் கூறினார்.
தமிழில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன், பின்னர் ‘தங்கலான்’, ‘ஹிருதயப்பூர்வம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது ‘சர்தார் 2’, ‘பாக்கெட் நாவல்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
பெண் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தால், பெண்களை மையமாகக் கொண்ட வலுவான கதைகளும், தரமான சண்டைக் காட்சிகளும் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், ஹாலிவுட்டின் ‘Kill Bill’ போன்ற நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களை இந்திய சினிமாவிலும் உருவாக்கும் திறன் இருப்பதாகவும் மாளவிகா மோகனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
—
