தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பான் இந்தியா நடிகராக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது, இயக்குநர் அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் தனது 22வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க சூப்பர் ஹீரோ கதையை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தனது 23வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் ஒரு பாலிவுட் நடிகை கதாநாயகியாக நடிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
