நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாரான இந்த படம், நிதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்ட நேரத்தில் திரைக்கு வராமல் தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சமீபத்தில் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவமான ஸ்டுடியோ கிரீன் சார்பில் ரூ.3 கோடி 75 லட்சம் மதிப்பிலான டிடி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த தொகை செலுத்தப்பட்டதை அடுத்து, மீதமுள்ள தொகையையும் தயாரிப்பு தரப்பு செலுத்தினால், படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஒரே நாளுக்குள் மீதமுள்ள தொகையை தயாரிப்பாளர்கள் திருப்பி செலுத்துவார்களா, அல்லது மீண்டும் படம் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதால், மீண்டும் தாமதம் ஏற்படுமோ என்ற சந்தேகமும் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து சட்ட மற்றும் நிதி தடைகளும் தற்போது முழுமையாக நீங்கியுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில், ‘வா வாத்தியார்’ திரைப்படம் வருகிற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதுடன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
