‘பராசக்தி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “சுதா கொங்கரா என்னிடம் இந்த கதையை முழுமையாக சொல்லி முடித்தபோது, இந்த படம் தமிழ் உணர்வை வெளிப்படுத்துவதோடு, அடுத்த தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். இந்த படத்தில் நடித்தால், என்னை பற்றி காலத்துக்கும் பேசுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது. ஒரு நடிகனாக இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. அதே நேரத்தில், இந்த படத்தில் நடித்தபோது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியதாக இருந்தது” என்று கூறினார்.
அவர் தொடர்ந்து, “இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் முழுமையாக நிஜம் என்று சொல்ல முடியாது. சினிமாவுக்காக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இயக்குனர் எந்த நேரத்தில் ஷாட் வேண்டுமென்று அழைத்தாலும், உடனே சென்று நிற்பது என்னுடைய கடமை. ‘டாக்டர்’ படத்திலிருந்து நான் மானிட்டர் பார்ப்பதற்கான பழக்கத்தை கைவிட்டேன். காரணம், சினிமா என்பது முழுக்க இயக்குனரின் படைப்பு. அதில் நான் தலையிட விரும்பவில்லை. இந்த மனப்பாங்கு தான் என்னை மென்மேலும் உயர்த்துகிறது” என்றார்.
மேலும், “இந்த படம் எப்படி எல்லாரையும் சென்று சேர வேண்டும் என்று நினைத்தோமோ, அது இப்போது நிறைவேறியுள்ளது. சினிமா துறையில் இருந்து பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினி சார், ‘வெரி போல்டு மூவி, சூப்பர் செகண்ட் ஆப், பென்டாஸ்டிக் பெர்பார்மன்ஸ்’ என்று வாழ்த்து தெரிவித்தார். ‘டாக்டர்’ படத்திலிருந்து இன்றுவரை என் படங்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் ரஜினி சாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி. படம் லாபம் எடுத்ததாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அதுவே எங்களுக்கான மிகப்பெரிய வெற்றி என்று மனம் திறந்து பேசினார்.
