அனில் ரவிப்புடி இயக்கத்தில், சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மன ஷங்கர் வரபிரசாத் காரு’ இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில், இளையராஜா இசையில் உருவாகி தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘தளபதி’ திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாடலை படத்தில் பயன்படுத்துவதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் முறையான அனுமதி பெறப்பட்டதா இல்லையா என்ற கேள்வி கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் பலராலும் எழுப்பப்பட்டு வந்தது. இதனிடையே, இப்படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், “படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இடையிலான காதல் காட்சிக்காக அந்த பாடலை பயன்படுத்தினோம். அந்த காட்சி மிக அழகாக அமைந்தது. இளையராஜா சாரைப் பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும். அவர் வழக்கு போடுவார் என்றெல்லாம் சிலர் பேசுவார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கிறது. அத்தகைய மேதையானவரிடம் சென்று, ‘சார், உங்கள் பாடலை என் படத்தில் பயன்படுத்த அனுமதி வேண்டும்’ என்று முறையாக கேட்டால், அவர் மகிழ்ச்சியுடன் கண்டிப்பாக அனுமதி அளிப்பார்.
எங்கள் தயாரிப்பாளர்கள் நேரில் சென்று, சிரஞ்சீவி சாரின் படத்தில் இந்த பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டபோது, அவர் எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். மற்ற படங்களில் என்ன நடந்தது எனக்கு தெரியாது. நாங்கள் முறையாக சென்று கேட்டோம், அவர் அனுமதி வழங்கினார்” என்று தெரிவித்துள்ளார்.
