பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிக்கியதாக கூறி, நடிகை ராதா தன்னைத் தாக்கியதாக முரளிகிருஷ்ணன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த முரளிகிருஷ்ணன், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர்கள் முரளி, வடிவேலு, வினுசக்கரவர்த்தி ஆகியோர் நடித்த சுந்தரா டிராவல்ஸ் எனும் நகைச்சுவைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராதா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த பின்னர், ராதா திருமணம் செய்து வாழ்க்கையில் இருந்து விலகினார். ஆனால், திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையாததால், தற்போது தனியாகவே வாழ்க்கை நடத்தி வருகிறார்.
பிட் காயினில் முதலீடு செய்வது தொடர்பாக துவாரகேஷிஸ் நடிகை ராதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ராதா 90,000 ரூபாய் பிட்காயினில் முதலீடு செய்ததாகவும், ஆனால் இதுவரை அசல் மற்றும் லாபத் தொகையை துவாரகேஷிஸ் திருப்பி வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனால், நடிகை ராதா துவாரகேஷிசை அறிமுகப்படுத்திய முரளிகிருஷ்ணனிடம் பணத்தைக் கேட்டார். நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் முரளிகிருஷ்ணனிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, முரளிகிருஷ்ணனை ராதாவின் தரப்பினர் தாக்கியதாகத் தெரிகிறது. தலையில் காயம் ஏற்பட்ட முரளிகிருஷ்ணன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் நடிகை ராதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.