இந்திய இசை உலகில் தனக்கென அழியாத இடத்தைப் பிடித்த எம்.எஸ். சுப்புலட்சுமி, 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தார். தனது 10-வது வயதிலேயே எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்த அவர், பின்னர் திரைத்துறையிலும் கால்பதித்தார். ‘சேவாசதன்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான எம்.எஸ். சுப்புலட்சுமி, அதன் பிறகு மேலும் நான்கு படங்களில் நடித்தார். அவற்றில் ‘மீரா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்தது.கர்நாடக இசையின் முன்னணி கலைஞராக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமி, தனது இசைப் பங்களிப்புக்காக நாட்டின் உயரிய விருதுகள் மற்றும் பல்வேறு கௌரவங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவரது வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்றை உருவாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘ஜெர்ஸி’, ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌதம் தின்னூரி இப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அல்லு அரவிந்த், பன்னிவாசு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு பதிலாக ருக்மிணி வசந்த் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. தற்போது இறுதியாக ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
—
