தமிழ் சினிமா தமிழ்நாட்டின் பெரும் அடையாளம் – நடிகர் கார்த்தி எமோஷனல் டாக்!

‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தனது திரைப்பயணம், ரசிகர்களின் ஆதரவு மற்றும் சினிமாவுக்காக மேற்கொள்ளப்படும் தியாகங்கள் குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சினிமா என்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், அதில் நிலையான இடத்தைப் பிடிக்க கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என கார்த்தி குறிப்பிட்டார். நடிகர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் நேரம், வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களில் தியாகம் செய்ய வேண்டியிருப்பதாக கூறிய அவர், சினிமாவுக்கு ஆதரவாக இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு தனி அடையாளம் இருப்பதாகவும், அந்தப் பெருமையை காப்பாற்றும் வகையில் படங்களை உருவாக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் யோகிபாபுவின் கடின உழைப்பையும் கார்த்தி பாராட்டினார். சிறிய வாய்ப்புகளில் இருந்து படிப்படியாக முன்னேறி இந்த நிலையை அடைந்துள்ள அவர், தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களை சிறப்பாக மாற்றுவதிலும் தயாரிப்பாளரின் நலனை கருத்தில் கொள்வதிலும் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். அதேபோல், தனது தந்தை சிவகுமார் தனது திரைப்பயணத்தில் நேரடியாக தலையிடாமல், தானாக போராடி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்ததாகவும் கார்த்தி நினைவுகூர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை காத்திருக்க வைத்த நிலையில், இந்த முறை அவர்கள் ரசிக்கும் வகையில் ‘சர்தார் 2’ உருவாகியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading