கவின் கதாநாயகனாக நடிக்கும் அவரது 10-வது திரைப்படமான ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில், சென்னை மற்றும் செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கவின் மற்றும் சஞ்சனா இடம்பெறும் காட்சிகளும் படமாக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பே தற்போது ரசிகர்களிடையே தனி கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 1987-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கிளாசிக் திரைப்படத்தின் பெயரையே இந்த புதிய படத்திற்கும் படக்குழு தேர்வு செய்துள்ளது. இருப்பினும், பழைய திரைப்படத்தின் கதைக்கும் தற்போதைய படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் முற்றிலும் புதிய கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிராமத்து பின்னணியில் சுவாரஸ்யமான கதை ஒன்றை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதால், ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
