‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீடித்து வருகிறது. இந்த நிலையில், இயக்குநர் சு. அருண் குமார் இயக்கத்தில் அவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசனின் 234-வது திரைப்படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இதனால், அந்தத் திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த சூழலில், ‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கிய சு. அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் உறுதியான தகவலுக்காக காத்திருக்கின்றனர்.
