வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். ‘சூதுகவ்வும்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.
அசோக் செல்வனின் 23-வது திரைப்படமாக உருவாகியுள்ள படத்திற்கு ‘அன்பில் அவன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே, படத்திலிருந்து ‘ஆசை வரமே’ என்ற பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
