தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு, தற்போது இந்தி திரையுலகில் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான ‘லோகா: சேப்டர் 1’ திரைப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, அவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி, தனது சினிமா பயணத்தை 2017-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘ஹலோ’ மூலம் தொடங்கினார். அதன்பின்னர் 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘மாநாடு’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த நிலையில், டொமினிக் அருண் இயக்கிய ‘லோகா: சேப்டர் 1’ படத்தில் நடித்த யக்ஷி கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ‘ப்ரளய்’ (Pralay) என்ற இந்தி திரைப்படத்தில் கல்யாணி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெய் மேத்தா இயக்கும் இந்த படம் ஜோம்பி த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த படத்திற்காக அதிரடி காட்சிகளில் நடிப்பதற்கான சிறப்பு பயிற்சிகளை கல்யாணி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘லோகா’ திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த அவர், இந்த படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் அதிக அளவில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும், ட்ரூ ஸ்டோரி ஃபிலிம்ஸ் மற்றும் மா கசம் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
—
