யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கிய ‘டாக்சிக்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்பட்டது. ஆனால் வெளியான பிறகு எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததுடன், வசூலிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது வரை சுமார் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ‘டாக்சிக்’ படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற முன்னணி நிறுவனம் ஒன்று ஆர்வம் காட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.150 கோடி வரை வழங்கவும் அந்த நிறுவனம் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படம் திரையரங்குகளில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்ற நம்பிக்கையில், ஓடிடி உரிமையை ரூ.200 கோடிக்கும் மேல் விற்பனை செய்ய படக்குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
எதிர்பார்த்ததற்கு மாறாக திரையரங்குகளில் படத்திற்கு மோசமான வரவேற்பு கிடைத்ததால், ஓடிடி உரிமையின் மதிப்பிலும் தற்போது பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமையை வாங்க ஓடிடி நிறுவனங்கள் தற்போது சுமார் ரூ.30 கோடி மட்டுமே வழங்க முன்வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை ஓரளவு சரிசெய்யும் நோக்கில், ஓடிடி வெளியீட்டிற்காக படத்தை மீண்டும் எடிட் செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்க பதிப்பில் இடம்பெற்ற காட்சிகளை மாற்றியமைத்து, புதிய எடிட்டிங்குடன் மாற்று பதிப்பை ஓடிடியில் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
