அறிமுக இயக்குநர் ஸ்ரீனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படம், துப்பறியும் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. வைபவ், ராம்கி, வியன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர், படத்தின் உருவாக்கம் மற்றும் கதைக்களம் தொடர்பாக பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்ததற்கு முக்கிய காரணம் இலக்கியம்தான். ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே திரைப்பட கனவை வளர்த்தேன். அதன் பிறகு மிஷ்கின் சாரிடம் உதவி இயக்குநராக இணைந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ போன்ற படங்களில் பணியாற்றினேன். ஏற்கனவே எத்தனை த்ரில்லர் படங்கள் வந்திருக்கிறது என்பதல்ல முக்கியம்; நாம் சொல்லும் கதையை எப்படி சொல்லுகிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில், இதுவரை வெளியான த்ரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ‘மாறுவேஷம்’ கொடுக்கும். ஒரு குடும்பத்தில் நடைபெறும் கொலையை நாயகன் எப்படி துப்பறிகிறார் என்பதுதான் கதையின் மையம்” என்றார்.
மேலும் அவர், “இரட்டை முகங்களுடன் வாழும் மனிதர்கள், அடுத்தடுத்து வெளிவரும் ரகசியங்கள், இரண்டு அடையாளங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கை ஆகியவை இந்தப் படத்தின் முக்கிய அம்சங்கள். முகத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், கடந்த காலத்தை முழுமையாக விட்டு தப்பிக்க முடியுமா என்ற கேள்வியையும் இந்தக் கதை எழுப்புகிறது. தேவையற்ற வன்முறை, ரத்தக் காட்சிகள் அல்லது போதைப்பொருள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இதில் இடம்பெறாது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய த்ரில்லராக இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ராம்கியின் கதாபாத்திரம் குறித்து பேசிய அவர், “கொலை வழக்கை விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் ராம்கி நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்தை மிகவும் சீரியஸாக வடிவமைத்துள்ளோம். ஆரம்பத்தில் இந்த வேடம் எனக்கு பொருந்துமா என்ற தயக்கம் அவருக்கே இருந்தது. ஆனால், அதை ஒரு சவாலாக ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் ராம்கிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
