நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் திரைப்படம் தொடர்பான படிப்பை முடித்த பிறகு தற்போது ‘சிக்மா’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தனது இயக்குநர் பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித்து அவர் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமா குடும்பத்தில் வளர்ந்ததால் சிறு வயதிலிருந்தே உலக திரைப்படங்களை ரசித்து பார்த்ததாகவும், அவற்றின் கதைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கூறியதே தன்னுள் ஒரு கதை சொல்லியை உருவாக்கியதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். கனடாவில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு கதையை எழுதி குறும்படமாக இயக்கிய அனுபவமும், பின்னர் இந்தியா திரும்பிய பிறகு முழுநீள திரைப்படத்தை இயக்கும் எண்ணமும் உருவானதாக கூறினார்.
தயாரிப்பாளர் தமிழ்குமரனை தனது சித்தப்பா சஞ்சீவ் அறிமுகப்படுத்தியதாகவும், பின்னர் சுபாஷ்கரனிடம் கதை சொல்லியதும் அது ‘சிக்மா’ திரைப்படமாக உருவானதாகவும் தெரிவித்தார்.மேலும், உறவுகளின் மதிப்பு குறைந்து வரும் சமூக நிலையை கேள்வி கேட்பதே இப்படத்தின் மையக் கருத்து என்றும், “மற்றவர்கள் நம்பாவிட்டாலும் முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள்” என்பதே படத்தின் முக்கியமான செய்தி என்றும் கூறினார். ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
நடிப்பது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், 20 வயதில் அல்போன்ஸ் புத்திரன் அழைத்தும் பக்குவம் இல்லாததால் நடிக்க மறுத்ததாகவும், ‘சிக்மா’ வெளியான பிறகே இயக்கத்திலா அல்லது நடிப்பிலா தொடர வேண்டும் என்பதை முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
—
