தமிழ் சினிமாவில் முதன்முறையாக இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் புதிய திரைப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் ராதிகா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், உளவியல் திகில் பாணியில் தயாராகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் ராஜா கிருஷ்ண மேனன் அறிமுகமாகிறார்.
தனது முதல் தமிழ் படத்திலேயே உளவியல் த்ரில்லர் கதையை கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் தெரிவித்துள்ளார். மேலும், த்ரிஷா, ராதிகா, அபர்ணா பாலமுரளி போன்ற திறமையான நடிகர்களுடனும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றுவது கூடுதல் உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
