தொடர்ந்து சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இருந்த நடிகர் ரவி தேஜாவுக்கு, சமீபத்தில் வெளியான ‘இருமுடி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. சிவா நிர்வானா இயக்கிய இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும், சிறுமி நக்ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் தமிழில் ‘இருமுடி கட்டு’ என்ற பெயரில் வெளியானது.
ஆன்மிகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையப்படுத்திய உணர்வுப்பூர்வமான கதையுடன் பெண் குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளையும் முன்வைத்துள்ளது. இதனால் குடும்ப ரசிகர்களிடமும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான நாள் முதலே திரையரங்குகளில் வசூல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது உலகளவில் ரூ.200 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் வெற்றியில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமும் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ‘இருமுடி’ படத்திற்காக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி சிறப்பு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் வழக்கமான டிக்கெட் விலையிலேயே ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருவது படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பின் அளவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
—
