கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகப்படியான பார்க்கிங் கட்டணம், உணவு மற்றும் தின்பண்டங்களின் உயர்ந்த விலை போன்றவை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு குடும்பம் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க குறைந்தபட்சம் ரூ.2,000 வரை செலவாகும் சூழல் உருவாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சாதாரணமாக குறைந்த விலையில் கிடைக்கும் பாப்கார்ன், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுவதாகவும், குடிநீர் பாட்டில்களின் விலையும் அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மட்டுமே அதிகம் குரல் கொடுத்து வந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் பெரிதாக கருத்து தெரிவிக்காத சூழலும் இருந்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராம் சரண், திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கார்னின் விலை குறித்து நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “இந்தியாவில் சினிமா இன்னும் மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் சிறந்த பொழுதுபோக்காகவே உள்ளது. குடும்பத்தினருடன் சேர்ந்து திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து அதைப் பற்றி விவாதிப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ஆனால் பாப்கார்னின் விலை மட்டும் கொஞ்சம் குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
