ஜூன் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அந்தரன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சி.வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி மற்றும் ‘விக்கல்ஸ்’ விக்ரம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஜின், “கடந்த இருபது ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்து வருகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. ஆனால் ‘அந்தரன்’ திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனெனில் தமிழ் ரசிகர்கள் தரமான படைப்புகளை எப்போதும் ஆதரித்து கொண்டாடுவார்கள். பல சவால்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த திரைப்படத்தை மனநிறைவுடன் உருவாக்கியிருக்கிறோம். என் மனைவி சாண்ட்ராவும் என் வெற்றிக்காக காத்திருக்கிறார்” என்று கூறினார்.
பின்னர் பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், “படப்பிடிப்பு தளத்தில் நான் நாயகியுடன் நேரடியாக அதிகம் பேசவில்லை. காரணம், அவர் பேசும் இந்தி மொழி எனக்கு தெரியாது. அதேபோல் நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு சரியாக புரியாது. அதனால் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் அறிந்த ஒரு உதவியாளர் மூலமாகவே அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவரது நடிப்பு ரசிகர்களை நிச்சயமாக கவரும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘அந்தரன்’ என்பதற்கு மறைந்திருந்து தாக்குபவன் என்ற பொருள் உள்ளது. நமது அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் அதன் விளைவாக பெரிய பாதிப்புகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் தீவிரத்தை உணர்கிறோம். அப்படிப்பட்ட ஒரு கருத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு உண்மை வழக்கை தழுவியே இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதுகுறித்த விவரங்களை இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிரவில்லை. படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு அதைப் பற்றி விரிவாக பேசுவேன். இது ஒரு திரில்லர் திரைப்படம் என்றாலும், காதல் உணர்வுகளுடன் சொல்லப்பட்டிருப்பதால் ரொமான்டிக் காட்சிகளும் இதில் அதிகம் இடம்பெற்றுள்ளன” என்று கூறினார்.
