தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் தனது ரசிகர்களை சமீபத்தில் நேரில் சந்தித்துள்ளார். சென்னை நடைபெற்ற அகில இந்திய ரவி மோகன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய அவர், நிர்வாகிகளின் பேச்சுகளையும் நேரில் கேட்டார். நிகழ்ச்சியின் போது நிர்வாகி ஒருவர், “அண்ணா, அழைப்பிதழ் கொடுங்கள், தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம். கொடியை கொடுங்கள், உங்கள் ரசிகர்கள் கோட்டையைப் பிடிப்போம்” எனக் கூறியுள்ளார். இந்தப் பேச்சு அங்கு அரசியல் தொடர்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனது அரசியல் வருகை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ரவி மோகன், ரசிகர்களை சந்திப்பதை மட்டும் வைத்து ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என முடிவு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். தற்போது தான் சினிமாவில் இருப்பதால் எந்த சார்பும் இல்லாமல் இருப்பதே யதார்த்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவை சாதி, மதம், பேதம் இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைக்கும் துறையாக தான் பார்ப்பதாக குறிப்பிட்ட அவர், திரையரங்குக்குள் நுழையும் மக்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே உணர்வுடன் திரைப்படத்தை ரசிப்பதாக தெரிவித்துள்ளார். இதே கருத்தை ‘கோமாளி’ படத்திலும் வெளிப்படுத்தியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், மக்களுக்கு உதவுவதற்கு அரசியல் பதவி கட்டாயமில்லை என்றும் ரவி மோகன் கூறியுள்ளார். பதவி கிடைத்தால் இன்னும் அதிகமாக உதவ முடியும் என்றாலும், பதவி இல்லாமலும் நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதே தனது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
