2எம் சினிமாஸ் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை தயாரிப்பாளர் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் தயாள் பத்மநாபன், “இது என்னுடைய 22வது திரைப்படமாகும். அதேசமயம், தமிழில் நான் இயக்கும் மூன்றாவது படமும் இதுவாகும். இந்த திரைப்படம் குறித்து சில முக்கியமான தகவல்களை நாங்கள் திட்டமிட்டு தற்போது வெளியிடாமல் வைத்திருக்கிறோம். அவை அனைத்தும் படம் வெளியான பிறகு நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் இப்படத்தின் கதை குறித்து அவர் பேசுகையில், “உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படம், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் வாழ்க்கையில் நிகழும் ஒரே ஒரு இரவை மையமாக வைத்து நகர்கிறது. அந்த இரவில் அவன் தனது கடந்தகால வாழ்க்கையையும், நடந்த சம்பவங்களையும் நினைவுகூரும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகளும், சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்த படமாக இது இருக்கும்” என்று கூறினார்.
