தமிழக திரையரங்குகளில் இதுவரை பொதுவாக அனைத்து நாட்களிலும் தினசரி நான்கு காட்சிகள் மட்டுமே திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. பண்டிகை காலங்கள் மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறையில் தமிழக அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
நடிகரும் தமிழக முதல்வருமான விஜய், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சினிமா துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து கேட்டு வரும் விஜயை, கடந்த மே 16ஆம் தேதி திரைப்படத் துறையை சேர்ந்த பல சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைத்திருந்தனர்.
அதில் முக்கியமாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய திரைப்படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இதை தொடர்ந்து ஆலோசனை நடத்திய தமிழக அரசு, தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
அதன்படி, இனிமேல் தமிழ்நாட்டில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு முதல் ஏழு நாட்கள் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என அரசு அறிவித்துள்ளது. முதல்வர் விஜயின் இந்த முடிவு திரைப்படத் துறை மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
