இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘அறிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
மோட்டிவ்ட்ரோன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இந்த படம், பெண்களின் உரிமைகள், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால் இந்த திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு படக்குழு சமீபத்தில் மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது ‘அறிவு’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
