தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் அர்ஜுன். பல தசாப்தங்களாக திரையுலகில் தொடர்ந்து முன்னணி நடிகராக இருந்து வரும் அவர், நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கும் அர்ஜுன், தனது ஆரம்ப கால வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “என் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தேன். அந்த சூழ்நிலையில் என்னிடம் இருந்த சொத்துக்களையே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அனைத்து பணமும் நஷ்டமாகிவிட்டதால், நடிப்பை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கலாமா என்ற நிலைக்கு நான் சென்றேன்.
எனக்கு வண்டி ஓட்டுவது நன்றாக தெரியும். அதனால் பேசாமல் டிரைவராக வேலைக்குப் போய்விடலாமா என்று கூட தீவிரமாக யோசித்தேன். ஆனால் அத்தனை தோல்விகளுக்குப் பிறகும், ‘நீங்கள் ஒரு நல்ல படம் கொடுத்தால் நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம்’ என்று ரசிகர்கள் என்னை நம்பியதே மீண்டும் என்னை சினிமாவில் நிலைநிறுத்தியது” என்று உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், தனது கடினமான காலகட்டத்தில் ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடிகர் அர்ஜுன் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
