சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்து வரும் நடிகர் விஜயை, திரைத்துறையை சேர்ந்த பல்வேறு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஏற்கனவே முதல்வர் விஜயை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இந்த நிலையில், தற்போது தமிழ் சின்னத்திரை துறையை சேர்ந்த குஷ்பு மற்றும் குட்டி பத்மினி தலைமையிலான சின்னத்திரை கவுன்சில் நிர்வாகிகள் முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் சின்னத்திரை துறையில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “ஒரு சக நடிகராக இருந்த என் தம்பி விஜய் இன்று முதல்வராக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கோவையில் நடந்த சிறுமி பாலியல் கொலை சம்பவம் மிகவும் வேதனையானது. நம் சமுதாயத்தில் இன்னும் இப்படி மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது வருத்தமளிக்கிறது.
முந்தைய ஆட்சியில் நடந்த பல விஷயங்களை மறந்துவிட்டு, தற்போது பதவியேற்று வெறும் 10 நாட்களில் எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம்? இப்போதுதான் விஜய் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
