நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னையை பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின் தனித்துவமான திரைக்கதை அமைப்பும், சிலம்பரசனின் மாறுபட்ட கதாபாத்திர தேர்வும் காரணமாக இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா மற்றும் இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், வடசென்னையின் அரசியல் மற்றும் கேங்ஸ்டர் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நடிகர் சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் இரவு நேரக் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நடிகை பிரியங்கா மோகன் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த ஆண்டு தீபாவளி சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
