நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் 63வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளனர். இதற்கு முன்பு விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர், இந்த புதிய படத்தை இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணுஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்த படம் குறித்து இயக்குநர் ஆனந்த் சங்கர் கூறுகையில், “படத்தின் முன்தயாரிப்பு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் படக்குழுவினர் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமையும். குடும்ப பார்வையாளர்களையும், ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையிலான பேமிலி த்ரில்லர் ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
—
