சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆன்மிகம் குறித்து மனம்விட்டு உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், “மனித வாழ்க்கை என்பது மிகவும் அரியதும் மகத்தானதுமான ஒன்று. அந்த வாழ்க்கையை எந்த காரணத்திற்காகவும் வீணாக்காமல் அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், வாழும் கலை இயக்கம் தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிப்பிட்ட அவர், அந்த நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என குருஜி நேரடியாக அழைத்ததாகவும் கூறினார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தான் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்ததால் கன்னட மொழியுடன் எப்போதும் ஒரு நெருக்கம் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தாலும் அந்த மொழியை மறந்ததில்லை என்றும் அவர் கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், முதல் முறையாக வாழும் கலை ஆசிரமத்திற்கு சென்றபோது அங்கிருந்த இயற்கைச் சூழலும், அமைதியான மனநிலையும், மக்களின் மகிழ்ச்சியான முகபாவனைகளும் தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாக அவர் கூறினார். அங்கு “ரஜினி” என்ற பெயரில் ஒரு குதிரை இருந்ததை பார்த்து சிரித்ததாகவும் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். இரண்டு நாட்கள் மட்டுமே தங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தாலும், அந்த இடத்தின் அமைதியும் ஆன்மிக சூழலும் தன்னை ஈர்த்ததால் 15 நாட்கள் அங்கேயே தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஒரு நாள் குருஜியுடன் இணைந்து பக்தர்களை சந்திக்க சென்றபோது நடந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தன்னை பார்த்தவுடன் புகைப்படம் எடுக்க வருவார்கள், கையொப்பம் கேட்பார்கள், “ரஜினி” என்று ஆரவாரம் செய்வார்கள் என நினைத்ததாகவும் கூறினார். ஆனால் அங்கு நடந்தது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். யாரும் தன்னை கவனிக்காமல் முழுமையாக ஆன்மிகத்தில் மூழ்கியிருந்ததை பார்த்ததும் தனது அகந்தை முற்றிலும் உடைந்துவிட்டதாக அவர் கூறினார். “புகழ் என்பது ஒரு கட்டத்தில் வரும், பிறகு மறைந்துவிடும். ஆனால் ஆன்மிகத்தின் மகிமை மட்டும் என்றும் நிலைத்து நிற்கும். ஒருவர் இந்த உலகை விட்டு சென்ற பின்னரும் ஆன்மிகத்தின் மதிப்பு மேலும் உயர்ந்துகொண்டே இருக்கும்” என்று ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.மேலும், “வாழ்க்கையில் ஒரு நல்ல குருவை பெறுவது மிகவும் அரிதான விஷயம். எனக்கு அந்த வகையில் மிகச் சிறந்த குருவாக ஸ்ரீ ஸ்ரீ கிடைத்துள்ளார். அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்” என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
