‘ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அந்த திரைப்படம் வெளியாகிய பின்னர், வெற்றிப் படமாக மட்டுமல்லாமல், கதை சொல்லும் விதத்திற்காகவும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கவனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. உலகளவில் இப்படம் ரூ.225 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் சிதம்பரம் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்ற முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.
இதனை தொடர்ந்து தற்போது சிதம்பரம் இயக்கத்தில் ‘பாலன் தி பாய்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையை ‘ஆவேஷம்’ திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். சிஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படத்தை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மேலும், இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். ‘பாலன்’ என்பது மலையாள சினிமாவின் முதல் ஒலிப்படத்தின் பெயராகும் என்பது குறிப்பிடத்தக்கது. 1938-ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம், ‘விகதகுமாரன்’ மற்றும் ‘மார்த்தாண்ட வர்மா’ திரைப்படங்களுக்கு பிறகு மலையாளத்தில் வெளியான மூன்றாவது திரைப்படமாகவும் இருந்தது. இந்த நிலையில், ‘பாலன் தி பாய்’ திரைப்படம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
