உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ‘டோரதி’ கனெக்ட் செய்யும் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

டொரான்டோ சர்வதேசத் திரைப்பட விழாவின் ‘சென்டர்பீஸ்’ பிரிவில் ‘டோரதி’ திரையிடப்பட்டது. குறிப்பாக, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விழாவில் திரையிடப்பட்ட முதல் இந்தியத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது. திரையிடல் முடிந்ததும் பார்வையாளர்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று படக்குழுவினரை பாராட்டினர்.

இந்த சர்வதேச வரவேற்பு குறித்து பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனக்கு நன்கு பரிச்சயமான இடம் மற்றும் கலாச்சாரத்திலிருந்து உருவான கதைதான் ‘டோரதி’ என்று தெரிவித்துள்ளார். படத்தில் பேசப்படும் நட்பு, பாரபட்சம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான உறவு தொடர்பான கேள்விகள் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கானவை அல்ல; உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் தொடர்புபடுத்தக்கூடியவை என்றும் அவர் கூறியுள்ளார்.

டொரான்டோ திரைப்பட விழாவில் படத்தை திரையிட முடிந்தது தனக்கு மிகவும் சிறப்பான அனுபவம் என குறிப்பிட்ட கார்த்திக் சுப்புராஜ், தான் சொல்ல நினைத்த கதையின் உணர்வையும் உண்மைத்தன்மையையும் சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இந்த வாய்ப்பு உதவியதாக தெரிவித்துள்ளார். அதோடு, இளையராஜாவின் இசை இந்தப் பயணத்திற்கு துணையாக அமைந்திருப்பது ‘டோரதி’ படத்திற்கு கூடுதல் சிறப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading