‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. இந்த திரைப்படத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், ரைசா வில்சன், அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்பை திரில்லர் மற்றும் ஆக்ஷன் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாமல் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இயக்குநர் மனு ஆனந்த் தற்போது நடிகர் விக்ரமிடம் புதிய கதையொன்றை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கதையின் மையக்கரு நடிகர் விக்ரமுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், முழுமையான திரைக்கதையை தயார் செய்து வரும்படி மனு ஆனந்திடம் அவர் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், மூன்று பாகங்களாக உருவாகும் திரைப்படம் என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக பொருத்தமான தயாரிப்பாளரை தேடும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அனைத்தும் சாதகமாக அமைந்தால், நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் மனு ஆனந்த் கூட்டணியில் புதிய பிரம்மாண்ட திரைப்படம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகர் விக்ரம், ஏற்கனவே அவரை வைத்து ‘இருமுகன்’ திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
