‘அழியாத கோலங்கள் 2’ மற்றும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எம்.ஆர். பாரதி, தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘சைக்கிள் கேப்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இசை மற்றும் உணர்வுகளை இணைக்கும் மியூசிக்கல் ரொமான்ஸ் கதையாக உருவாகி வருகிறது.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி கூறுகையில், “‘சிந்து பைரவி’, ‘முகவரி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற திரைப்படங்களில் காதலும் இசையும் இணைந்து மக்களின் மனதை தொட்டது. அதேபோன்ற உணர்வுகளை தரும் வகையில் தான் ‘சைக்கிள் கேப்’ திரைப்படமும் உருவாகி வருகிறது. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை இசை எளிதாக வெளிப்படுத்திவிடும். அந்த சக்தியை இந்த திரைப்படத்தில் முழுமையாக பயன்படுத்தியுள்ளோம். உறவுகளையும் மனித உணர்வுகளையும் மையமாகக் கொண்ட கதையாக ‘சைக்கிள் கேப்’ அமைகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்ச்சிகளை இணைக்கும் பாலமாக இசை செயல்படும். திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் உருவாகினாலும், அதற்குள் உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையின் தன்மையும் இடம்பெறும். இந்த திரைப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் சதீஷ் பத்மநாபன் இசையமைக்கிறார். மேலும் நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கவுஷிக் ஸ்ரீதரன் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்,” என்றும் தெரிவித்துள்ளார்.
