இந்திய திரைப்பட உலகில் தனித்துவமான படைப்புகளின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது இயக்கத்தில் வெளியான ‘டெவ்.டி’, ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்’ இரண்டு பாகங்கள், ‘ராமன் ராகவ் 2.0’, ‘மன்மர்ஜியான்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றன. தனது வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் யதார்த்தமான காட்சியமைப்புகளால் இந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் அனுராக் காஷ்யப்.
ஆனால் கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘நிஷாஞ்சி’ திரைப்படமும், இந்த ஆண்டு வெளியான ‘கென்னடி’ திரைப்படமும் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை. இதனால் அனுராக் காஷ்யப்பின் அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பந்தர்’ வெளியாக தயாராகியுள்ளது. இந்த திரைப்படத்தில் பாபி தியோல், சபா ஆசாத், சன்யா மல்ஹோத்ரா, சப்னா, இந்திரஜித் சுகுமாரன் மற்றும் ராஜ் பி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புகழை இழந்து வரும் ஒரு தொலைக்காட்சி நடிகர், தனது முன்னாள் காதலியின் மூலம் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வதும், அதன் பின்னர் அந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டங்களுமே இந்த திரைப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்துவரும் அனுராக் காஷ்யப், இந்த ‘பந்தர்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது பழைய வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
