மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘மாமன்’, ‘தக் லைப்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற ஒரு புதிய நகைக்கடை திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த கடை திறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நிறுவனத்தின் பிராண்டு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு விஜய் சார் மிகவும் பிடிக்கும். அவர் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சியான விஷயம். நான் கேரளாவைச் சேர்ந்தவள் என்பதால், தமிழ்நாட்டில் எனக்கு வாக்குரிமை இல்லாதது ஒரு வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், எனது நண்பர்களில் பலர் விஜய் ரசிகர்கள். மக்களிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். தன்னை உயர்த்திய மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணமே அவரை இந்த பாதைக்கு கொண்டு வந்துள்ளது. அவர் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்காக இறைவனை வேண்டுகிறேன். மக்கள் கூட அவர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இறுதியில் முடிவு எடுப்பது மக்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.
—
