இந்தியத் திரைப்பட உலகில் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி வந்தாலும், கன்னடத் திரைப்படத் துறை நீண்ட காலமாக பெரிதாக கவனிக்கப்படாத நிலையில் இருந்தது. அந்த நிலையை முற்றிலும் மாற்றி, முழு திரையுலகமும் வியந்து திரும்பிப் பார்க்கும் வகையில் உருவான படங்களாக ‘கேஜிஎப் 1’ மற்றும் ‘கேஜிஎப் 2’ திகழ்கின்றன. குறிப்பாக, இரண்டாம் பகுதி ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுவரை தமிழ் திரைப்படத் துறை கூட அந்த அளவிலான வசூலை எட்ட போராடி வரும் நிலையில், கன்னடத் திரைப்படம் அதை 2022ஆம் ஆண்டிலேயே சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பகுதியின் முடிவில் அடுத்த கட்டத்தைக் குறிக்கும் ஒரு முன்னோட்டம் இருந்தபோதிலும், நான்கு ஆண்டுகள் கடந்தும் மூன்றாம் பகுதி தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இப்படத்தின் இயக்குநரான பிரசாந்த் நீல் ‘சலார்’ திரைப்படத்தை இயக்கியதுடன், தற்போது ஜூனியர் என்டிஆர் நடித்துவரும் புதிய படத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘சலார் 2’ திரைப்படத்தையும் அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ‘கேஜிஎப் 3’ திரைப்படம் குறித்து நடிகர் யஷ் புதிய தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த மூன்றாம் பகுதி உருவாக வாய்ப்பு இல்லை என்றும், தற்போது தாம் ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமாயணா 1, 2’ போன்ற படங்களின் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரசாந்த் நீலுடன் தொடர்ந்து தான் கலந்துரையாடி வருவதாகவும், மூன்றாம் பகுதியிற்கு பொருத்தமான கதை உருவானவுடன் அது கண்டிப்பாக உருவாகும் என்றும் கூறியுள்ளார்.
