தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் பிரியங்கா மோகன், சமீபத்தில் மேட் இன் கொரியா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் கதை தென் கொரியாவை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இதில் கொரிய நடிகர்கள் மற்றும் நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தென் கொரியாவின் அதிபர் லீ ஜே மியுங் மற்றும் அவரது பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கிய விருந்தில் பிரியங்கா மோகன் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற அந்த மாலை உண்மையிலேயே அதிசயமானதும் கனவு போன்றதுமான அனுபவமாக இருந்தது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையாகும். அந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இத்தகைய முக்கியமான தலைவர்களுடன் ஒரே இடத்தில் இருந்து, அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த நன்றியுணர்வை ஏற்படுத்தியது. அவர்களுடன் அமர்ந்து உணவு பகிர்ந்து கொள்ளும் அந்த தருணம் எனக்கு மறக்க முடியாத பெருமையாக இருந்தது.
மேலும், எங்கள் மேட் இன் கொரியா திரைப்படத்திற்கு அவர்கள் அளித்த பாராட்டு என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. அதைப் பற்றி நினைக்கும் போது கூட இன்னும் ஆச்சரியமாக உள்ளது. சசி தரூர் அவர்களை சந்தித்து, அவருடன் சிந்தனையூட்டும் உரையாடலில் ஈடுபட்டது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.
என்னுள் இருக்கும் அந்த சிறுமி இன்று ஒரு பெரிய சாதனையை அடைந்துள்ளதுபோல் உணர்கிறாள். பல ஆண்டுகளாக கனவு கண்டதையும், கடின உழைப்பையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒரு அமைதியான தருணமாக இது இருக்கிறது. இப்படிப்பட்ட அனுபவங்களே நாம் செய்யும் பணியின் அர்த்தத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன. கலாச்சாரங்களை இணைக்கும் கதை சொல்லும் இந்த பயணம் என்றும் மறக்க முடியாததாக இருக்கும். மேட் இன் கொரியா திரைப்பட குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த அனுபவத்தை இவ்வளவு சிறப்பாக்கியதற்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
—
