ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் கிராமத்து பின்னணியில் அமைந்த ஆக்ஷன் கதையுடன் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்திற்கான இசையமைப்பாளராக ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் சாய் அபயங்கர் இந்த படத்திற்காக ஒப்பந்தமாகினார். கருப்பு திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியேறியதற்கான காரணம் குறித்து சாய் அபயங்கரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, கருப்பு திரைப்படத்திற்காக இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தபோது உண்மையிலேயே எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. சூர்யா நடித்திருக்கும் படம் என்பதால், இந்த வாய்ப்பின் மூலம் சிறந்த இசையை வழங்கி எனது தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் நான் இந்த படத்தில் இணைந்தேன். ஆனால் எனக்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகி பின்னர் வெளியேறி விட்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. இருப்பினும் அவர் எந்த காரணத்தால் அந்த படத்திலிருந்து விலகினார் என்பது குறித்து யாரும் எனக்கு தெளிவாக எதுவும் கூறவில்லை.
அதன்பிறகு, இந்த படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தது தொடர்பாக நான் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் நேரடியாக பேசினேன். அப்போது, நீங்கள் கருப்பு திரைப்படத்திற்கு இசையமைப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று அவர் தெரிவித்தார். அதன் பிறகுதான் நான் இந்த படத்தில் முழு ஈடுபாட்டுடன் இசையமைக்கும் பணியை தொடங்கினேன். மேலும், இந்த திரைப்படம் ஆன்மீக அம்சங்களையும் இணைத்துக் கொண்டதாக உருவாகியுள்ளது என்றும், இதன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கூடுதலாக, இந்த படம் தெலுங்கில் “வீர பத்ருடு” என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
—
