நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது. டிரைலரில் பவுன்தாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமாரின் செயல்கள் மற்றும் அவரைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் நகைச்சுவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது சொத்துகளை எதிர்பார்த்து அவரது மரணத்தை காத்திருக்கும் மகன்களின் நடத்தைகள் டிரைலரில் கலகலப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் இந்த திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக இருப்பதோடு உணர்ச்சிமிக்க அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் திரைப்படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
