தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 47’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் ‘பிரேமலு’ திரைப்படத்தின் கதாநாயகன் நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம் பணியாற்றுகிறார். ‘ஆவேஷம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இந்த புதிய திரைப்படம் எந்த வகையான கதையாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் சூர்யா காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த திரைப்படம் தமிழ்ப் படமா அல்லது மலையாளப் படமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து கொச்சி விமான நிலையத்தில் இயக்குநர் ஜித்து மாதவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘சூர்யா 47’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். மேலும் இது ஒரு தமிழ்த் திரைப்படம் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
